வானத்தின் அகலம்
நூறாண்டு கடந்த
பழைய அரசமரத்திலிருந்து
ஒவ்வொரு காலையிலும்
புறப்படுகின்றன பறவைகள்
வானத்தின் அகலத்தை
அளந்து பாராமல்
இன்றைய பறப்புக்கு
இன்னொரு நாள் பறக்க
தேவையான நீலம்
மீதமிருக்குமா என
ஒருபோதும் அவை
கேட்டுக் கொள்வதில்லை
அடிவானம் விலகிச் செல்கிறதா
அல்லது
மெல்ல நெருங்கி வருகிறதா என
யோசித்ததில்லை
சிறகுகளுக்குக் கீழே
ஒவ்வொரு கணமும்
விரிந்து கொண்டிருக்கும்
வழியைத் தவிர
வேறு எந்த வரைபடத்தையும்
பின்பற்றுவதில்லை
சென்ற இடங்களுக்கு
சாட்சியாக
வீட்டுக்குக் கொண்டு செல்ல
வானத்தின் துண்டுகளை
சேகரிப்பதில்லை
எழுகின்றன
சிதறுகின்றன
காற்றிடம் தம்மை
ஒப்படைக்கின்றன
வயல்களுக்கிடையே
கூரைகளுக்கிடையே
தொலைவில் ஒலிக்கும்
அழைப்புகளுக்கிடையே
பகலைக் கழிக்கின்றன
மாலை சாய்கையில்
திரும்புகின்றன
புறப்பட்ட அதே சிறகுகளுடன்
புறப்பட்ட அதே கிளைக்கு—
வானம் முழுவதுமே
இரு கிளைகளுக்கு
இடையேயான தூரமே தவிர
வேறொன்றுமில்லை
என்பதைப் போல.
*
படம்: ஏஐ உருவாக்கம்
*
26 ஜூலை 2026, சொல்வனம் இணைய இதழ்: 371_ல் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளில் ஒன்று.


படம் அருமை. கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவானம்முழுவதும் இரு கிளைகளுக்கு இடையேயான தூரம் தான்.
அது உண்மைதான். அவைகள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம்.
இயற்கையோடு இயந்து வாழும் . வானத்தில் பறக்க நீள அகலங்களை கணக்கிடுவது இல்லை.