வியாழன், 6 ஆகஸ்ட், 2026

வானத்தின் அகலம் - சொல்வனம்: இதழ் 371

 

வானத்தின் அகலம்

நூறாண்டு கடந்த
பழைய அரசமரத்திலிருந்து
ஒவ்வொரு காலையிலும்
புறப்படுகின்றன பறவைகள் 
வானத்தின் அகலத்தை
அளந்து பாராமல்

இன்றைய பறப்புக்கு
இந்த நீலம் போதுமா 
இன்னொரு நாள் பறக்க
தேவையான நீலம் 
மீதமிருக்குமா என
ஒருபோதும் அவை 
கேட்டுக் கொள்வதில்லை

அடிவானம் விலகிச் செல்கிறதா
அல்லது
மெல்ல நெருங்கி வருகிறதா என
யோசித்ததில்லை

சிறகுகளுக்குக் கீழே
ஒவ்வொரு கணமும்
விரிந்து கொண்டிருக்கும்
வழியைத் தவிர
வேறு எந்த வரைபடத்தையும்
பின்பற்றுவதில்லை

சென்ற இடங்களுக்கு
சாட்சியாக 
வீட்டுக்குக் கொண்டு செல்ல
வானத்தின் துண்டுகளை
சேகரிப்பதில்லை

எழுகின்றன 
சிதறுகின்றன
காற்றிடம் தம்மை
ஒப்படைக்கின்றன
வயல்களுக்கிடையே
கூரைகளுக்கிடையே
தொலைவில் ஒலிக்கும்
அழைப்புகளுக்கிடையே
பகலைக் கழிக்கின்றன

மாலை சாய்கையில்
திரும்புகின்றன
புறப்பட்ட அதே சிறகுகளுடன்
புறப்பட்ட அதே கிளைக்கு—

வானம் முழுவதுமே
இரு கிளைகளுக்கு
இடையேயான தூரமே தவிர
வேறொன்றுமில்லை
என்பதைப் போல.
*
படம்: ஏஐ உருவாக்கம்
*

26 ஜூலை 2026, சொல்வனம் இணைய இதழ்: 371_ல் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளில் ஒன்று. 
நன்றி சொல்வனம்!
**

1 கருத்து:

  1. படம் அருமை. கவிதை நன்றாக இருக்கிறது.
    வானம்முழுவதும் இரு கிளைகளுக்கு இடையேயான தூரம் தான்.
    அது உண்மைதான். அவைகள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம்.
    இயற்கையோடு இயந்து வாழும் . வானத்தில் பறக்க நீள அகலங்களை கணக்கிடுவது இல்லை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin