புதன், 4 ஆகஸ்ட், 2021

முடிவு இல்லாத பாடல் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (15) - புன்னகை இதழ்: 79



முடிவு இல்லாத பாடல்

‘நான் உடலின் மின் சக்தியைப் பாடுகிறேன்’ என விட்மன் எழுதியபோது
எனக்குத் தெரியும் அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரென்று
எனக்குத் தெரியும் அவருக்கு என்ன வேண்டியிருந்ததென்று:

தவிர்க்க இயலாதவற்றிற்கு நடுவே
ஒவ்வொரு கணமும் முழுமையான உயிர்ப்போடிருத்தல்

நம்மால் மரணத்தை ஏமாற்ற முடியாது
ஆனால் நம்மை அது அழைத்துச் செல்கையில்
அதனைக் கடுமையாக வேலை வாங்க முடியும்

அதற்குத் தெரிய வரும் ஒரு வெற்றி வாகையை,
நம்முடையதைப் போன்று பூரணமானதை.

**

மூலம்:
"A song with no end" By Charles Bukowski

**

கவிதைக்கான படம்: இணையத்திலிருந்து..!

**

ருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

**

ஜூலை 2021 புன்னகை இதழில் வெளியாகியுள்ள 
மூன்று தமிழாக்கக் கவிதைகளுள் ஒன்று.
நன்றி புன்னகை!

***

8 கருத்துகள்:

  1. கவிதை தமிழாக்கம் அருமை.
    புன்னகை இதழில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள். கவலையை மறக்க அப்பா வழியை தேர்ந்து எடுத்து இருக்க வேண்டாம்.
    //ஒவ்வொரு கணமும் முழுமையாக உயிர்ப்போடிருத்தல் //

    அருமை.

    பதிலளிநீக்கு
  2. கவிஞரின் அறிமுகமும் நன்று. மொழிபெயர்ப்புக் கவிதையும் நன்று.

    பதிலளிநீக்கு
  3. காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
    காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்- பாரதியின் வரிகள் நினைவிற்கு வருகிறது.

    எல்லைகள் தாண்டி கவிஞர்களுக்கு மரணத்தை வெட்கப்படுத்திப் பார்க்கப் பிடித்திருக்கிறது.

    //தவிர்க்க இயலாதவற்றிற்கு நடுவே
    ஒவ்வொரு கணமும் முழுமையான உயிர்ப்போடிருத்தல்// அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு