திங்கள், 22 செப்டம்பர், 2014

பறவை - பாப்லோ நெருடா (3)

நாளின் பரிசுப்பொருட்கள் மொத்தமும் கடத்தப்படுகின்றன
ஒரு பறவையிடத்திருந்து அடுத்ததற்கு.
ஒரு புல்லாங்குழலிலிருந்து நாள்
இன்னொரு புல்லாங்குழலுக்குச் செல்கிறது
செடிகொடியாலான உடையினை அணிந்து.
பறத்தல்கள் திறக்கின்றன சுரங்கத்தை
காற்று கடந்து செல்ல
பறவைகள் நீலவானைக் கிழித்துச் செல்ல-
நுழைகிறது அங்கே இரவு.

பல பயணங்களுக்குப் பின் திரும்பி வரும்போது
நின்று விட்டேன் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே ஆகாயத்தில் -
பார்த்தேன்
எப்படி இறக்கைகள் இயங்குகின்றன,
எப்படி மென்சிறகுகளாலான தந்திகள் மூலம்
நறுமணங்கள் அனுப்பப்படுகின்றன என.
அத்தனை உயரத்திலிருந்து காண முடிந்தது
பாதையை, வசந்தத்தை, கூரை ஓடுகளை,
வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை,
நுரைகளுடனான அவர்களின் காற்சட்டைகளை,
அத்தனையும் தெரிந்தது பச்சை வானத்திலிருந்து.
என்னிடம் வேறு மொழிகளில்லை
கூடு திரும்பும் தூக்கணாங்குருவிகளைத் தவிர.
நெருப்பில் பளபளக்கும் நீராக
நடனமாடுகிறது மகரந்தத்தின் முனையில்
சிறு பறவை.
**

மூலம்:
Bird
by Pablo Neruda (in Spanish)

ஆங்கிலத்தினூடாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட ஸ்பானிஷ் கவிதை.
மலைகள் (53_வது இதழ்) வெளியீடு, நன்றி மலைகள்!

படம் நன்றி: இணையம்.

19 கருத்துகள்:

  1. பறவைகள் நீலவானத்தை கிழித்து செல்வது அழகு.
    கவிதை அழகு, அருமை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தித்திக்கும் வரிகள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பறவைப் பார்வை மிக ரம்யம்.ஒன்றிலிருந்து ஒன்று அருமை.விமானப் பறவையிலிருந்து பார்ப்பது போலவும் தோற்றம்.நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. சிறுபறவையின் பெரும்பார்வை . மூலத்தின் அழகு குலையா வண்ணம் அருமையான தமிழாக்கம் . – சுப்ரா .
    http://subra56.blogspot.in/

    பதிலளிநீக்கு
  5. நெருப்பில் பளபளக்கும் நீராக - வார்த்தை ஜாலம் வசீகரிக்கிறது. அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு