புதன், 25 ஜூன், 2014

கருணை கொள்ளுங்கள்; காரணமும் விளைவும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (5,6)

கருணை கொள்ளுங்கள்

எப்போதும் மற்றவரின் கருத்துகளைப்
புரிந்து கொள்ளவே
கேட்டுக் கொள்ளப்படுகிறோம்
அவை என்னதான்
காலத்துக்குப் பொருந்தாமல்
முட்டாள்தனமானதாய்
வெறுப்பூட்டக் கூடியதாய் இருந்தாலும்.

தங்கள் மொத்தத் தவறுகளையும்
பாழடிக்கப்பட்ட வாழ்க்கையையும்
கருணையோடு நோக்குமாறு
கேட்டுக் கொள்கிறார்கள்,
குறிப்பாக வயதாகி விட்டவர்கள்.

ஆனால் மூப்பென்பது
நமது செயல்களின் மொத்தம்.
அவை மிக மோசமாக 
மூப்படைந்திருக்கின்றன
மங்கிய வாழ்வை வாழ்ந்து
சரியாகப் பார்க்க மறுத்து.

அவர்களுடைய தவறு இல்லையா?

யாருடைய தவறு?
என்னுடையதா?

அவர்களுக்குப் பயம் வந்து விடும்
என்கிற பயத்தினால்
என்னுடைய கருத்துகளை
அவர்களிடமிருந்து
ஒளித்து வைக்க
கேட்டுக் கொள்ளப்பட்டேன்

மூப்பு ஒரு குற்றமில்லை

ஆனால் வேண்டுமென்றே
பாழடிக்கப்பட்ட வாழ்க்கை
வேண்டுமென்றே பாழடிக்கப்பட்ட
பல வாழ்வுகளுக்கு
காரணமாய் இருப்பது

வெட்கத்துக்குரிய குற்றம்.
*

காரணமும் விளைவும்

ஆகச் சிறந்தவர்கள்
அநேகமாக அவர்தம் கைகளாலேயே இறந்து போகிறார்கள்
விட்டு வெளியேற விரும்பி.
விடப்பட்ட எஞ்சியவர்களால்
புரிந்து கொள்ளவே முடிவதில்லை
ஏன் எவரும்
தங்களை விட்டுச் செல்ல விரும்புகிறார்கள் என்பதை.
*

மூலம்: 'Be Kind' & 'Cause And Effect'
By Charles Bukowski
*

படம் நன்றி: இணையம்
*

24 ஜூன் 2014, நவீன விருட்சத்தில் வெளியான தமிழாக்கக் கவிதைகள். நன்றி நவீன விருட்சம்!

14 கருத்துகள்:

  1. முதுமையைப் பேசிய கவிதை அபாரம். பிரமிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    கவிதையின் வரிகள் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறதுநன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. முப்பது வருடங்களுக்கு முன்பு இழைத்த பாலியல் கொடுமைகளுக்கு இப்போது வழக்கு நடத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு நீதிமன்றத்துக்கு கைத்தாங்கலாக அழைத்துவரப்படும் முதியவர்களைப் பார்க்கும்போது மனத்தில் இனம் புரியாத பதைப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மூப்பின் கவிதை வாசித்தபின் உள்ளுக்குள் ஒரு தெளிவு ஏற்படுகிறது.

    இரண்டாவது கவிதை, தன்னைச் சார்ந்தவர்களைத் தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொள்பவர்களை நினைவுக்குக் கொண்டுவந்து நெகிழ்த்துகிறது.

    இரண்டும் மனந்தொட்ட கவிதைகள். அழகான மொழியாக்கம். நவீன விருட்சத்தில் வெளியானமைக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. 1) மூப்பு முடியாததுதான். ஆனால் அது ஒரு பாதுகாப்பு - பல சமயங்களில்!

    2) 'விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே' வரிகளைத் தவறாய்ப் புரிந்து கொண்டனரோ.....!

    பதிலளிநீக்கு