திங்கள், 30 ஜனவரி, 2012

ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..


இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடி...


1. நம்மை நாம் நம்பும் முன் நம் மீது நம்பிக்கை வைக்கும் நட்புகளின் அன்பினால் நகருகின்றது வாழ்வு சரியான பாதையில்.

2. எவ்வளவுக்கு எவ்வளவு நம் குறைகளுக்காக வாதிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை நம்மிடம் இருப்பது உறுதியாகிறது. ஒப்புக் கொண்டு உருப்படுகிற வழியைப் பார்ப்போம்.

3. வெற்றிகள் சந்தோஷத்துக்கு வித்திடுவதில்லை. சந்தோஷங்களே வெற்றிக்கு வித்திடுகின்றன. எந்தச் செயலையும் விரும்பி சந்தோஷமாகச் செய்வோம்.

4. குற்றம் காண்பதில் மகிழ்ச்சி கொள்வது பழகி விட்டால் பெருமகிழ்ச்சி தரக்கூடிய நல்லன பலவற்றின் தரிசனங்களை நாமாகவே நழுவ விடுகிறோம்.

5. வெற்றிக்குக் காத்திராமல் பயணத்தைத் தொடருவது விவேகம்.

6. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்துப் பாராட்டி கொண்டாடி மகிழலாம். பின்னொருநாள் நினைத்துப் பார்க்கையில் அவை பெரிய விஷயங்களாகி விட்டிருக்கும்.

7. ஒருவர் நம்பிக்கையுடன் முன்னேறிக் காட்டுவது, ஒரு நூறு பேரின் ஆர்வத்தை ‘நம்பிக்கை’ ஆக்க வல்லது.

8. ‘நம்மால் முடியாது’ என ஒரு விஷயத்தை விட்டு விலகுவதுதான் தோல்வியே தவிர நமக்கு முன்னால் செல்பவரால் ஏற்படுவது அல்ல தோல்வி.

9. நனவாக சாத்தியமற்றவை கனவாகத் தோன்றுவதில்லை. மெய்ப்பட உழைக்கவும் வேண்டும்.

10. இந்நாளின் இந்நிமிடத்தின் இந்நொடியை விடச் சிறந்த தருணம் எதுவாக இருக்க முடியும்?

[தொகுப்பது தொடரும்]


பி.கு: ஆன்றோரும் சான்றோரும் அனுபவத்தில் சொல்லாத ஏதொன்றையும் புதிதாக நாம் சொல்லிவிடப் போவதில்லை. ஆயினும் நம் அனுபவத்தில் ஏற்றுக் கொண்டவற்றை, புரிந்து கொண்டவற்றை, நடைமுறைப் படுத்தியவற்றை, கடைப்பிடிக்க விரும்புவற்றை நமக்கு நாமே உரக்கச் சொல்லிக் கொள்வது உற்சாகமாய் இருக்கவும் உறுதியுடன் நகரவும் வழிவகுக்கும். அப்படியாக ஆரம்பித்த ‘ட்வீட்’களை, பலராலும் விரும்பப்பட்டவற்றை, நான் எடுக்கிற படங்களுடன் ‘ஃபேஸ்புக்’ கில் நிலைத்தகவலாகப் பகிர்ந்தவற்றை.. நண்பர்களும் கேட்டுக் கொண்டதன் பேரில் இங்கும் தொகுத்து வைக்கிறேன். உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதோடு, எனக்கான சேமிப்பாகவும்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

2012 குடியரசு தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - மகாபாரத மணல் சிற்பம், பூ அருவி, புத்தர் ஸ்தூபி.. ( Bangalore Lalbagh Flower Show )

#1. மகாபாராதக் காட்சி மணல் சிற்பமாக..
# 2.மாலை வெயிலில்.. பாயும் குதிரை(கள்)

# 3. பொங்கி வரும் பூ அருவி

# 4. ஜோடி மயில்

# 5. தென் கொரியாவின் புத்தர் கோவில்: ‘அமைதி ஸ்தூபி’ (Buddha Peace Stupa)

கடந்த ஒருவாரமாக நடந்து கொண்டிருக்கும் லால்பாக் மலர்கண்காட்சி வரும் ஞாயிறு அன்று நிறைவடைகிறது. மேற்கண்டவையே இந்த வருடக் காட்சியில் மக்களைக் கவரும் முக்கிய அம்சங்களாக முன்னிறுத்தப்பட்டிருந்தன.

தவிரவும் ஒவ்வொரு இந்திய மாநிலத்தின் பாரம்பரிய நடனத்தாலும் வணக்கம் சொல்லும் ‘நிருத்யாஞ்சலி’ பழங்கள் மலர்கள் கொண்டுத் தனித்தனியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. நேரமின்மையால் அதைப் பாகம் இரண்டாகப் பிறிதொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.

தோட்டக்கலைக்குத் தேவையான அனைத்து சாமான்களும் கிடைக்கும் வகையில் கடைகளும், எட்டு தனியார் நர்சரிகள் விதைகளுடன் செடிகளையும், காய்கறிகளை அவற்றின் செடியோடு காட்சிக்கும் வைத்திருந்தனர்.

நேற்று குடியரசு தினத்தில் மட்டும் இரண்டரை இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது கண்காட்சி. இதுவரையிலும் 134 பள்ளிகள் தங்கள் மாணவர்களை அழைத்து வந்திருக்கின்றனர். வாரயிறுதிலும் இரண்டு முதல் இரண்டரை இலட்சம் பேர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

# 6. கண்ணாடி மாளிகை
அதிக கூட்டத்தைத் தவிர்க்க எண்ணியே 25ஆம்தேதி மாலை நேரமாக நான் சென்றிருந்தாலும் க்ளாஸ் ஹவுஸ் உள்ளே எப்போதும் போலக் கட்டுக்கடங்கா கூட்டமே. நமக்கு விருப்பமான கோணங்களில் தள்ளி நின்றெல்லாம் எடுக்கிற வாய்ப்பு குறைவே. இருப்பினும் கண்ட காட்சிகளை ஒரே கோணத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பல கோணங்களில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் நீங்களும் முழுமையாக ரசித்திட.

மணல் சிற்பம் முதன் முறையாகப் பார்க்கிறேன். பொதுவாகக் கடற்கரை ஊர்களில் அடிக்கடி காட்சிப் படுத்துவார்கள். இந்த முறை போக வேண்டுமா என ரொம்ப யோசித்தபோது ஈர்த்த விடயங்களில் முக்கியமாக இதுவே இருந்தது.

# 7. பார்த்திபனுக்கு ரதம் செலுத்தும் பரமாத்மா (பக்கவாட்டுத் தோற்றம்)
# 8. பிரதானக் கட்டமைப்புஅமைதி நாடும் புத்தர் ஸ்தூபி சுமார் 34 அடி சுற்றளவில், 30 அடி உயரத்தில், 9 அடி பீடத்தின் மேல் அமையுமாறு ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டான் வான் ஜார்ஸ்வெல்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

உபயோகிக்கப்பட்ட நான்கு லட்சம் மலர்களில் 1 1/2 இலட்சம் ரோஜாக்கள்; 1 1/2 இலட்சம் இளஞ்சிகப்பு நந்தியாவட்டைகள்; 25 ஆயிரம் ஆர்ச்சிட் எனப்படும் வண்ணக் கொத்து மலரகம், மற்றும் 7500 சதவலி படர்கொடி, ட்ரசேரா, வாடாமல்லிகள்.

புத்தர் பீடம் 75 ஆயிரம் ரோஜாக்கள், வாடாமல்லிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
***

மயில்களை ஏதோ கல்யாண ரிசப்ஷன் போல் பந்தல் போட்டு நிறுத்தி வைத்திருந்தது வேடிக்கையாக இருந்தது.


# 9. தோகை விரித்து மாப்பிள்ளை


# 10. நாணிக் குனிந்து மணமகள்

# 11. ஜோடி நெம்பர் ஒன்

# 12. பாய்கிறது சிற்றாறு 34 வகை மலர்களோடு..

# 13. வளைந்து நெளிந்து விரிந்து பரந்து..

# 14. கரையோரப் பூக்கள்

# 15. கம்பளம்

# 16. நூறு வயது கீதம்தேசியக் கொடியை அரிசி மணிகளாலும் தேசிய கீதத்தை கடுகுகளைக் கொண்டு எழுதியும் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

ரவீந்திர நாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டு, 27 டிசம்பர் 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாகப் பாடப்பட்ட நம் தேசிய கீதத்துக்கு வயது நூறு நிறைவுறுகிறது. பின்னர் 24 ஜனவரி 1950-ல், இப்பாடலின் ஹிந்தி மொழியாக்கத்தினை இந்திய அரசு முறைப்படி நம் நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்திருக்கிறது.

# 17. வண்ணக் கனவுகள்

ஏந்திநிற்கும் பலூன்களைப் போல
எண்ணத்தில் வளர்த்திருக்கும்
ஒளிமயமான எதிர்காலம் குறித்த
இவளது
வண்ணக் கனவுகள் யாவும்
மெய்ப்படட்டும்!

நர்சரிகள் இருந்த பகுதியைத் நான் தவறவிட்டதில் வருத்தம். மணல் சிற்பத்துடன் அதையும் எதிர்ப்பார்த்தே சென்றிருந்தேன் தனி மலர்களைப் படமாக்கும் ஆர்வத்தில். தவறு விட்டதை உணர்ந்து தேடி அடைந்தபோது இருட்டத் தொடங்கி விட்டிருந்தது. இருப்பினும் படமாக்கிய இரண்டே இரண்டு ஒன்றை மலர்கள் பார்வைக்கு:

# 18. அகிலமெங்கும் அன்பு நிலவ..
ரோஜா

# 19. அமைதியும் சமாதானமும் பரவ..
வெள்ளையில் டாலியா
**********



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

1. தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..-சுதந்திரதின சேதி சொல்லி..

2. ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் (பாகம்-1)

3. சித்திரப் பூக்கள் - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சி (பாகம்-2)

4. 2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்

5. பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010

6. மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..


மற்றும்

7. இப்பதிவின் பாகம் இரண்டு: .‘நிருத்யாஞ்சலி’ இந்தியப் பாரம்பரிய நடனங்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

பெங்களூர் ஹெப்பால் ஏரிக்கரை பூங்காவில்.. கொன்றையும் குல்மொஹரும்.. - படங்கள்


பெங்களூரின் வடபகுதியில் பெலாரி ரோடினை அவுட்டர் ரிங் ரோட் கடக்கும் இடத்தில், மேம்பாலம் அருகே தேசியநெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது ஹெபால் ஏரி. நகரிலிருந்து விமான நிலையம் சென்று வருபவர் கண்களிலிருந்து எளிதாகத் தப்பி விட வாய்ப்பின்றி 150 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இது 1537_ஆம் ஆண்டு கெம்பகெளடா உருவாக்கிய மூன்று ஏரிகளுள் ஒன்று.

# 2.
பலவிதமான பறவைகள் கூடும் ஏரிகளுள் இதுவும் ஒன்றென எப்போதோ படித்த நினைவில் பறவைகளைத் தேடிதான் நுழைந்தேன் சென்ற வருடம் ஒரு கோடை மாதத்தில் அதுவும் மாலை நேரத்தில். பிறகுதான் தெரிந்தது குளிர்காலமே (நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும்) அதற்குச் சரியான சமயமென்பதும் அதுவும் அதிகாலையில்தான் பாடும் பறவைகளின் தரிசனம் அதிகமாகக் கிட்டும் என்பதுவும். காக்கா குஞ்சின் சத்தம் கூடக் கேட்க முடியாத அமைதி நிரம்பிய ஏரிக்குள் தூண்டிலைப் போட்டபடி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.

# 3போன மட்டிற்குச் சும்மாத் திரும்ப முடியுமா? பறவைகள் இல்லாவிட்டால் என்ன என்று ஏரியையொட்டிப் பூத்துக் குலுங்கி நின்ற கொன்றைகளுக்கும் குல்மொஹர்களுக்கும் வீசினேன் கேமரா வலையை. கொத்து கொத்தாக மாட்டியவற்றை ஃப்ளிக்கரில் பகிர ஆரம்பிக்கவும் நண்பர்கள் அவரவர் எடுத்த அதே மலர்களின் படங்களைப் பகிர ஆரம்பித்தார்கள். பலருக்கும் முதலில் கொன்றைக்கும் குல்மொஹருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆக அனைவருமே ஆர்வத்துடன் இரு மலர்கள் குறித்தும் தெரிந்த தகவல்களையும் தெரியாதவற்றை இணையத்தில் தேடிப் பிடித்தும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம். அப்படியாக அங்கு நான் பகிர்ந்த படங்களின் தொகுப்பு சேகரித்தத் தகவல்களுடன்:

  • Peacock flowers என அறியப்படுகிறது கொன்றை. மயிலின் கொண்டை போல் வெளிவரும் மகரந்தத் தண்டுகளால் அப்பெயர் ஏற்பட்டதோ என்னவோ. Pride of Barbados அல்லது Barbados Flower Fence என்றும் இதை அழைக்கிறார்கள். எங்கள் குடியிருப்பின் சுற்றுச் சுவரினுள் வரிசையாக அணிவகுத்து நிற்பன இவையே:)! பல பூங்காக்களுக்கு வேலியாக கொன்றை மரங்கள் இருப்பது கவனித்தால் தெரிய வரும்.

# 4. மயிற்கொன்றை / Peacock Flower
உலர்ந்த சிலவும்
மலர்ந்து சிரிப்பனவும்
மலரக் காத்திருப்பவையும்..

  • காட்டுத் தீயின் ஆழ்சிகப்பு நிறங்கொண்டிருப்பதால் குல்மொஹரை Fire of the Forest என்றழைக்கிறார்கள். அந்தி இருளில் செம்பிழம்பாக முதல் படத்தில் கனன்று கொண்டிருப்பதும் குல்மொஹரே. தமிழில் ‘மயூரம்’ என்பார்கள் என இணையத்தில் கண்டேன். இதன் மூடிய மொட்டுக்கள் நல்ல பச்சை நிறத்தில் இருக்கின்றன. கொன்றை மலர்களிலோ விரியாத மொட்டுக்கள் மலர்களின் வண்ணத்தில் இளஞ்சிவப்பாகவேக் காணப்படுகின்றன.

# 5. மயூரம் / Gulmohar
பச்சிளம் மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மலர்களும்

  • அதேபோல் கொன்றை மலர்களின் இதழோரங்களில் மஞ்சள் நிறம் பார்டர் போல அமைவது இன்னொரு வித்தியாசம். வேறு வண்ணக்கலவையற்று முழுமையான சிகப்பில் குல்மொஹர்.

# 6. மலர்ந்து விரிந்த மயூரம்

# 7. மஞ்சட்கொன்றை மலர்கள் / Yellow Peacock Flowers

# 8. ஆயிரம் மலர்களே..
எல்லா மலரும் அழகாய் மிளிர எதைப் படமெடுப்பதெனும் குழப்பத்தில் ஒரு இளைஞன்.

# 9. வானமே எல்லை
# 8. பக்கத்து வீட்டுக்காரங்க..
“நலம். நலமறிய ஆவல்...”

# 9. பக்கத்துத் தெருக்காரங்க..
  • மேலிருப்பதில் இடப்பக்கம் வரிசை கட்டி நிற்பவை கொன்றை. வலது முனையில் குல்மொஹர். கொன்றை மரங்களைக் கவனித்தால் வேரிலிருந்தே அடி மரம் பல கிளைகளாகப் பிரிவதைப் பார்க்கலாம். குல்மொஹரிலோ மரங்களின் அடிமரம் ஒற்றையாக உயர்ந்து வளர்ந்து பின்னரே கிளைகளாகப் பிரிகின்றன.

# 10. மரத்துக்குக் கிளை பாரமா...?
வீழ்ந்தாலும் தலைதூக்கி வாழ்ந்து காட்டும் கிளை

பாட்டனி க்ளாஸ் முடிந்தது:)! பூங்காவை இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாம் வாங்க...

# 11 முகப்பில்..

வாகன நிறுத்தம் அருகில்..

# 12. காவல்


# 13. காத்திருப்பு‘சிக்குமா சிக்காதா..?’ தூண்டில் முள்ளைச் சுற்றிய தண்ணீரின் வளையங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி சிறுவன்.

# 14. கண்ணுல சிக்குன ஒண்ணே ஒண்ணுதேடிப்போனதே இதற்குதானே:)? இப்போது பறவைகளைக் காண நல்ல சீசன். ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று வாருங்கள்! [ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதன் பேரில் பறவையின் பெயரைத் தேடியதில், இது Pond Heron என்பதும் தமிழில் ‘குருட்டுக் கொக்கு’ என அழைக்கப்படுவதாகவும் தெரிய வந்தது.]

# 15. சின்னக் குயில்அழகு வனத்தில் இவள் போலச் சிட்டாகக் கூவித் திரிந்த குழந்தைகள் பலரைப் பார்க்க முடிந்தது.

# 16 தனியே தன்னந்தனியே..

# 17. ஏரி பார்த்த இரட்டைக் கோபுரக் குடியிருப்பு
படம் இரண்டில் புள்ளிகளாகத் தெரிகிறக் கட்டிடங்கள்.

# 18. கூந்தற்பனை (Caryota urens) திப்பிலிப் பனை என்றும் அழைக்கப்படும் இதனை இலங்கையில் ‘கித்துல்’(Kitul Palm) என்கிறார்கள்.

அனுமதி நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை இலவசம்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம் உண்டு.

ஆறுமாதங்களாக சேமிப்பிலே இருந்து போன படங்களைப் பகிர்ந்தாயிற்று, இயற்கையின் எழிலை நீங்களும் ரசிக்க வேண்டுமெனும் ஆசையில் :)!
***

சனி, 14 ஜனவரி, 2012

இன்றைய கல்கியில்.. . ‘உறங்காது காத்திருக்கும் ஊஞ்சல்!’


காத்திருப்பு

ஆடும் ஊஞ்சல் முன்
அலைபாய்ந்த கண்களோடு
தன் முறைக்காக
நெடுநேரம் காத்திருந்தாள் சிறுமி.

புதன், 11 ஜனவரி, 2012

‘அகநாழிகை’ பொன். வாசுதேவனின் "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை"-ஒரு பார்வை-உயிரோசையில்..



கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக ’ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளுடன் சில என்றால் அன்பைத் தேடுவனவாக பிரியங்களைப் போற்றுவனவாக இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத்
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது:
“உன்னுடன் சேர்ந்து வரும்
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம்
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம்
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’. உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27.
*** *** ***

11 ஜனவரி 2012 உயிரோசையில்.., நன்றி உயிரோசை!

திங்கள், 9 ஜனவரி, 2012

கூட்டல் கழித்தல் - நவீன விருட்சத்தில்..



பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன்
எழுதி எழுதிக் கைசோர்ந்து
கணினிக்கு மாறினார்.
ஜிபியில் சேமித்து முடியாமல்
டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும்
திணற நேர்ந்தது.
அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென
மானுடரை அணுகினார்.
முட்டிமோதி முன்வந்த எவருக்கும்
கணக்குகளில்
எந்தப் பாவமும் தெரியவில்லை.
பாவத்தைப் பற்றிய பார்வை
மாறியிருந்தது.
சம்பளமாகப் பூலோகத்தில்
சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி
வேலையைத் தொடங்கினார்கள்.
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
பணம், பதவி, புகழ் எனும்
விடைகளையே
திரும்பத் திரும்பத்
தேடியிருந்தது
சுவாரஸ்யத்தைத் தந்தது.

சகமனிதரிடம் அன்பு
பிற உயிரிடம் நேசம்
இயற்கையிடம் நன்றி
அற்றுப் போன பூமியின்
கடவுச்சொல் ஒருநாள்
காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்.
சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து
வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.
அண்டவெளியில் பூமி
அதிவேகத்தில் சுழலாம்.
இரண்டு மணிகளுக்கொருமுறை
இரவு பகல் நேரலாம்.
அந்நாள்வரையிலும்
கூட்டலாம் கழிக்கலாம்
வகுக்கலாம் பெருக்கலாம்.
*** ***

26 டிசம்பர் 2011, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.

* ஆறுவருடங்களுக்கு முந்தைய சுனாமியின் நினைவுகள் தந்த கவிதை.

* படம்: இணையத்திலிருந்து..

புதன், 4 ஜனவரி, 2012

‘விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றதும் இழந்ததும்...’ - வடக்குவாசல் கட்டுரை - நான் எடுத்த படங்களுடன்

நான்கு பக்கக் கட்டுரையுடன், அட்டையில் என் படத்தையும் வெளியிட்டு அங்கீகாரம் தந்திருக்கும் வடக்குவாசலுக்கு நன்றி!

தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொருவர் ஆசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதி வருகிறார்கள். இம்மாதம் பெங்களூர் குறித்து எழுதும் வாய்ப்பினை ஆசிரியர் எனக்கு அளித்திருந்தார். எடுத்த படங்கள் ஏழுடன் கட்டுரை:

***

புதுவருடத்தின் தொடக்கத்தில் வடக்குவாசல் தந்திருக்கும் அங்கீகாரத்துடன் கிடைத்த இன்னொன்றாக, 1 ஜனவரி தமிழ்மணம் அறிவித்த சென்றவருட ‘முன்னணி 100’ வலைப்பூக்களின் பட்டியல். அதில் முத்துச்சரமும்.., நன்றி தமிழ்மணம்!
2011 blog rank 26

சென்றவருடம் போல் இவ்வருடம் வாரம் இரண்டு பதிவுகளாக வழங்க இயலுமா என்பது எனக்குள் கேள்விக்குறியாக இருக்கும் வேளையில் கிடைத்த இடம் ஊக்கம் தருவதாக இருப்பதை மறுக்க இயலாது. இதை சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு நன்றி! அதேநேரம் பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற இவ்வரிசையை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வழியில் தொடர்ந்து நல்ல பதிவுகளைத் தருவதில் மட்டும் அக்கறை காட்டி வந்தால் அது பதிவுலகம் ஆரோக்கியமாக இயங்க வழிவகுக்குமென்பது என் தாழ்மையான கருத்து.
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin