திங்கள், 27 ஜூன், 2011

சுயநலம் - நவீன விருட்சத்தில்..


அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது

பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றத்தான் செய்கிறது

கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது

பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,

புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.

ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***

படம்: இணையத்திலிருந்து..


16 ஜூன் 2011 நவீன விருட்சத்தில்
.., நன்றி நவீன விருட்சம்!

செவ்வாய், 21 ஜூன், 2011

மறுப்பு - கீற்றினில்..

ஓவியம் நன்றி: சந்திரமோகன்

உச்சிகால பூஜைக்குத்
தட்டிலே தங்கவெள்ளி மலர்களுடன்
உள் நுழைந்தவனை நிறுத்திக்
கடைசி முழம் பூவை
வாங்கச் சொல்லிக் கெஞ்சுகிறாள்
சுட்டெரித்த சூரியக் கதிரில்
சுருங்கிப் போயிருந்த கிழவி.

பலமான தலை அசைவில்
மறுப்பை உணர்த்தியவனிடம்
தன் காணிக்கையாகவேனும்
கடவுளிடம்
சேர்த்துவிடக் கோருகிறாள்.

ஒதுக்கிவிட்டு நகர்ந்தவனின்
அன்றைய பிரார்த்தனைகள் யாவும்
பலித்திருக்கவே கூடும்.

ஆயினும் அவன் தோட்டத்து
மல்லிகைச் செடிகள் மட்டும்
மொட்டு விட மறந்து போயின
அதன் பிறகு.
***

21 ஜூன் 2011 கீற்று இணைய இதழில்.., நன்றி கீற்று.

வெள்ளி, 17 ஜூன், 2011

ஆடுகளம் - நவீன விருட்சத்தில்..


வாழ்க்கை ஏட்டின்
வாசித்த முடித்த பக்கங்கள்
காற்றில் படபடக்கையில்
கண்ணில் மாட்டுகிற
பரம பத ஏற்ற இறக்கங்கள்

தாய உருட்டல்களில்
வாங்கிய வெட்டுக்களாகச்
சில வருத்தங்கள்

இலகுவாய் தாவிக் கடந்த
பாண்டிக் கட்டங்களாகச்
சில சந்தோஷங்கள்

பல்லாங்குழியில்
வெற்றிடம் துடைத்தோ
‘பசு’வெனக் கூவியோ
வெள்ளைச் சோழிகளை
அள்ளிய குதூகலங்கள்

நேர்மைத் திறமற்ற
கண்ணாமூச்சித் துரோகங்கள்

பம்பரத் தலைக்குள்
நுழைகிற ஆணிகளாக
நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்

விண்ணைத் தொட்ட ஆனந்தமாக
விரல்நுனியில் பிடி இருக்க
உலவ விட்டப் பட்டங்கள்

கணநேரக் களிப்பைத் தந்த
வெற்றிக்காகக்
கட்டம் கட்டமாகக்
காய்நகர்த்திய உறுத்தல்கள்

கல்லா மண்ணா..
வாழ்க்கை கல்லில் பொறிக்கப்படுமா
மண்ணோடு மறையுமா
கேள்வியில் தொடங்கிய வேள்விகள்

காலம் வர்ணனையுடன்
வரைந்து வைத்த குறிப்புகளில்
அடிக்கோடிட்டுப் போற்றியும்
அறவே மறக்க விரும்பியுமாய்
வாழ்க்கை வரிகள்...

எவற்றாலும் எவருக்கும்
வற்றுவதாகத் தெரியவில்லை
ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்

சிறப்பான
அல்லது
இன்னும் சிறப்பான
ஏதோ ஒன்று காத்திருக்கிறது
என்கிறதான எதிர்பார்ப்பில்.
*** ***

படம்: இணையத்திலிருந்து..

9 ஜுன் 2011 நவீன விருட்சத்தில்
.., நன்றி நவீன விருட்சம்!

ஞாயிறு, 12 ஜூன், 2011

‘அழகர்சாமியின் குதிரை’ முதல் அன்றைய ‘பா’ வரிசைப் படம் வரை..-பிட் மல்டிப்ளெக்ஸில்..-ஜூன் போட்டி

டுன காலும், பாடுன வாயும், பிட் போட்டிக்குப் பதிவு போட்ட கையும் நிற்காதுல்ல. ‘பிட்’டுக்கான மாதாந்திரப் பதிவு இனியும் தொடரும், உங்களுக்கு நினைவூட்ட.. உற்சாகமளிக்க.. மாதிரிப் படங்களுடன். விளம்பரமென்றும் கொள்ளலாம். அதிலும் இம்மாதத் தலைப்புக்கும் விளம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே. தமிழில் வெளியான ‘திரைப்படத் தலைப்பு’களுக்குப் பொருத்தமான நிழற்படங்கள் என்பதே இம்மாதப் போட்டி. சுவாரஸ்யம் இல்லையா?

போட்டி அறிவிப்பு இங்கே. போட்டி விதிமுறை இங்கே.

அட்டகாசமாய், அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

இனி என்னுடைய தயாரிப்பிலான படங்கள். டிக்கெட் இலவசமே:)!

இவற்றில் புது ரிலீஸ் 7. மற்றன தலைப்புக்குப் பொருத்தமாய்.

1.அழகர்சாமியின் குதிரை


2.வசந்த மாளிகை


3.தொட்டால் பூ மலரும்


4.கோபுரங்கள் சாய்வதில்லை
மாமல்லபுர கடற்கரைக் கோவில்
நூற்றாண்டுகள் பல கடந்து
சிற்பக்கலைக்கு சிகரமாக

5.பயணங்கள் முடிவதில்லை

6.அலைகள் ஓய்வதில்லை


7.தூங்காதே தம்பி தூங்காதே


8.வானமே எல்லை


9.புதிய பாதை


10.வாழ்க்கைப் படகு


11.கண்ணாமூச்சி ஏனடா?


12.தீபம்


13.இரு மலர்கள்


14.தவமாய் தவமிருந்து


15.தண்ணீர் தண்ணீர்


16.இயற்கை


17.மாட்டுக்கார வேலன்


18.மன்னாதி மன்னன்


19.கலைஞன்
இசைவெள்ளம் நதியாக ஓடும்..

20.மேல்நாட்டு மருமகள்
சொந்த இடம் விட்டு
வந்த மண் வாழ
வனிதை காட்டும் அக்கறை
கைவழி தொங்கும் துணிப்பையில்..
சொல்லுவோம் நாமும்
‘நோ டு ப்ளாஸ்டிக்’


21.தில்லானா மோகனாம்பாள்


22.ஜகன் மோகினி


23.பக்த மீரா


30-35 வருடங்களுக்கு முன்னால் திரைப்படங்களை ‘ஈஸ்ட்மென் கலர் சித்திரம்’ என்றே விளம்பரம் செய்து கவர்ந்திழுப்பார்கள். எங்கள் ஊரில் வெளியாகும் வண்ணப்படங்களுக்கு மத்தியில் அன்றைய பிரபல ‘பா’ வரிசை பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு போன்ற கருப்பு வெள்ளைப் பழைய படங்களும் குறிப்பிட்ட அரங்குகளில் வெளியாகி சக்கைப் போடு போடும். எத்தனை முறை பார்த்திருந்தாலும் இன்றைக்கும் ‘எதிர் நீச்சல், பாமாவிஜயம்’ போன்ற படங்கள் ஒளிபரப்பானால் நம்மை இழுத்து தொலைகாட்சி முன் அமர்த்திக் கொள்கின்றன.

இதோ அந்த வரிசையில் ஒரு படம். நான் எடுத்த படம் அன்று. ‘ஓட்டைப் பல் சிறுமி’யாக தோன்றிய படம்:)!

அன்பு’ தலைப்புக்காக என் அப்பா எடுத்த.., நான் அண்ணனுடன் இருக்கும் பழையபடம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்பாவின் அதே யாஷிகா-D கேமராவால் அவரது தங்கை எங்களை எடுத்த படம் இது. அந்தப் பதிவிலேயே ‘தான் எடுத்த படத்தைப் பகிர்ந்திட வேளை வரவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். இம்மாதப் போட்டிக்கு என் தொகுப்பிலே இடம் பெறச் செய்த பின் அனுப்பி வைக்கலாமெனக் காத்திருக்கிறார்.

படம் ப்ரிண்ட் ஆகி வந்ததும் பூரித்துப் போன என் அப்பா, இதை வைத்துப் பிரத்தியேகமாக ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அந்த ஆண்டு உறவினர் அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார். இன்றளவிலும் எங்கள் குடும்பத்தினர் மனதில் மறக்க முடியாத படமான இது உங்கள் பார்வைக்கும்..

பாசப் பறவைகள்
ஒரு குழந்தையை சிரிக்கிற மாதிரி படம் பிடிப்பதே சிரமம். நான்கு சிறார்களை எப்படி சிரிக்க வைத்தாராம்? அங்குதான் இருக்கிறது இதை எடுத்தவர் யார் என்ற ரகசியம்:)! தான் ‘ஒன்.. டு.. த்ரீ..’ சொன்னதும், தொடர்ந்து எங்களை ‘ஹா.. ஹா.. ஹா..’ என மூன்று முறை தொடர்ந்து ஒலிக்குமாறு சொல்லச் சொல்ல, நாங்களும் அவ்வாறே செய்ய அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். இப்போது புரிந்திருக்குமே யார் என்பது? நீங்கள் யாவரும் ‘ஹா ஹா ஹா’ என சிரித்து மகிழ ஹாஸ்யரசம் படைத்து வரும் கோமா அவர்களே!

பிட் போட்டிகளில் ஆர்வமாகப் பங்கு பெற்று, பலமுறை முதல் மற்றும் இறுதிச் சுற்றுக்கள் வரை வென்று அசத்தி வருபவரின் திறமையை 37 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் காட்டிய படம்.

நீங்காத நினைவுச் சித்திரத்துக்கும், இங்கு பதிய விரும்பி அனுமதித்ததற்கும் அன்பு கலந்த நன்றி அவருக்கு:)!


ம்மாத நடுவராகப் புதிதாகப் பொறுப்பு எடுத்திருக்கும், MQN என நண்பர்களால் அன்புடன் விளிக்கப்படும், MQ Naufal பற்றியும் சில வார்த்தைகள் சொல்லிக் கொள்ள விருப்பம். அனைவராலும் அறியப்பட்டவர் எனினும் தவறவிடக் கூடாத அவரது தளத்தை இங்கு அறிமுகப் படுத்த ஆவல். வாழ்க்கையை ரசனையுடன் பார்ப்பதோடு மட்டுமின்றி, அவற்றின் அதிர்வுகளையும், மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளையும் தன் படங்களில் பதிவு செய்கின்றவர். அவசியம் தொடருங்கள்:
Naufal Photography.


இன்னும் ஏன் காத்திருக்கீங்க? உங்க படங்களை சீக்கிரமா அனுப்புங்க. இந்த லிங்கில் பத்து பத்து ஆண்டாக ரிலீஸ் ஆன தமிழ்படங்களின் பெயர் பட்டியல் கூட இருக்கு. அதையும் பாருங்க. கவித்துவமா யோசியுங்க. பிட் மல்டிப்ளெக்ஸ் உங்கள் படங்களைத் திரையிட ஆவலுடன் காத்திருக்கிறது:)! முடிவுத் தேதி ஜூன் பதினைந்து. இன்னும் நாலு நாள் இருக்கு. நடுவிலே இதோ ஒரு ஞாயிறும் இருக்கு.
***

புதன், 8 ஜூன், 2011

க்ளிக் க்ளிக் ஆர்வம்-‘கல்கி’ தந்துள்ள ஊக்கம்

இந்த வார கல்கியில் என் புகைப்படத் தொகுப்பு.

‘கேமரா என் மூன்றாவது கரம்’ எனும் அறிமுகத்துடனும், படங்களுக்கான கல்கியின் வாசகங்களுடனும்:கல்கி இணைய தளத்திலும் காணலாம் இங்கே.. http://www.kalkionline.com/kalki/2011/jun/12062011/kalki1003.phpநன்றி கல்கி!
செய்திச் சித்திரத்துக்கு மிக்க நன்றி அமிர்தம் சூர்யா!

தகவல்:
ஜூன் பதினைந்துக்குப் பிறகு கட்டண சேவை ஆகிறது ‘கல்கி ஆன்லைன்’. இதுகாலமும் இலவசமாக நான்கு புத்தகங்களைப் படிக்கத் தந்த வகையில் கல்கிக்கு நன்றி சொல்லலாம். ஆன்லைனில் தொடர்ந்து வாசிக்க விரும்புகிறவர்கள் ஆரம்பக்காலச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பகிர்வு:
இதற்கு முன் ‘தேவதை’ இதழின் ‘வலையோடு விளையாடு’ பக்கத்தில் வெளியான புகைப்படத் தொகுப்பு இங்கே.
இம்மாத ‘இவள் புதியவள்’ இதழில் ‘பெங்களூர் மலர் கண்காட்சி’ தொகுப்பு இங்கே.
***

வெள்ளி, 3 ஜூன், 2011

பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி - என் புகைப்படத் தொகுப்பு.. இவள் புதியவளில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஊட்டியை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகளைக் குஷிப்படுத்த எப்போதும் போலவே, இவ்வருடமும் மே இருபதாம் தேதி முதல் மலர்கண்காட்சி நடைபெற்றது.'ஊட்டியில்' கோடையில் என்றால் 'பெங்களூரில்' வருடந்தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களையொட்டி பத்து நாட்கள் போல லால்பாக் தோட்டத்தில் நடக்கும் மலர் கண்காட்சிகள் உலகப் பிரசித்தமானவை.
கோடையில் கண்காட்சி ஊட்டியில் என்பது, பெங்களூரில் நடந்ததாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. ஆகவே கோடையிலன்றி லால்பாக் கண்காட்சியை ரசிக்க ஜனவரி அல்லது ஆகஸ்டில் பெங்களூர் வர வேண்டும். இன்னும் சில தகவல்கள் சற்றே விரிவாக:

டொர்னட்டோவில் வசிக்கும் வயதான பெரியவர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு வருடமும் தவறாமல் மலர்கண்காட்சியைக் காண இந்தியா வருவதாகக் குறிப்பிட்டிருந்தது சுவாரஸ்யம். ஆம், இப்படியான ஆசையுடன் எத்தனை பெரியவர்கள்?

நாங்கள் காரை பார்க் செய்யும் போது இளைஞர் ஒருவர் தன் காரில் இருந்து மடக்கு சக்கர நாற்காலியை இறக்கிக் கொண்டிருந்தார். மைதானத்தினுள் ஆறேழு நாற்காலிகளைப் பார்க்க முடிந்தது. 460 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாயிற்றே லால்பாக். அப்பெரிய தோட்டத்தில்.., அலைமோதும் கூட்டத்தில்.. வீட்டுப்பெரியவர்களை நடக்க வைக்க வேண்டாமென நாற்காலிகளில் வைத்துத் தள்ளியபடி அக்கறையுடன் அழைத்து வந்து கண்காட்சியை ரசிக்க வைக்கிற இன்றைய தலைமுறையைக் காண்கையில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்.

“அழகாய்ப் பூத்திருக்கு” தலைப்பிற்கு ஏற்ப பூக்களின் வண்ணங்கள் வனப்பாய் தெரியுமாறு படங்களை வெளியிட்டிருக்கும் இவள் புதியவளுக்கு நன்றி:)!

பத்திரிகையில் வந்த படங்களை பெரிய அளவில் மறுபடியும் இங்கே கண்டு களியுங்கள்:

1. குதும்ப்மினார்


2. பெங்களூரின் அந்நாளையத் தொடக்கமான கெம்பகெளடா மண்டபமும். பின்னால் இந்நாளையத் தொடக்கமான மெட்ரோவும்


3. அன்னை காவேரி


4. டிமோத்தி, கற்றாழை வகை கள்ளிச்செடி:

5. அன்தூரியம் செடிகளின் அணிவகுப்பு

செந்நாரை மலர்
சிகப்பு’ தலைப்புக்காக PiT போட்டிப் பதிவொன்றில் இம்மலரின் க்ளோஸ் அப் ஷாட்டை பகிர்ந்து கொண்டிருந்தேன். பல பேரின் கவனத்தை ஈர்த்தது. ‘இதன் பெயர் என்ன’ என என் flickr தளத்திலும் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். பின்னரே இணையத்தில் தேடி அறிந்தேன். Anthurium எனப்படும் இம்மலர் பெரும்பாலும் குளிர் பிரதேசங்களிலேயே செழித்து வளருகிறது. அந்த வண்ணத்தினால் Flamingo(செந்நாரை) Flower என்றும் அழைக்கப்படுகிறது.

6. உயர்ந்த தூணில் மெகா மலர் பந்து
பார்க்கப் பார்க்க ஆசை வருகிறதா:)?

பத்திரிகை கட்டுரையின் கடைசி பத்தியை மீண்டும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்: “வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று மலர் கண்காட்சி” :)!
*****

வியாழன், 2 ஜூன், 2011

இசைக்கு மொழி தேவையில்லை.. - மேடைப்படங்கள் (பாகம் 3)

ருஹானியத் என்பது ஒரு அற்புதமான இசைத் திருவிழா. இந்தியாவின் அத்தனை அதிகம் அறியப்படாத கிராமங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும், உலகின் பல பாகங்களைச் சேர்ந்த இசை மன்னர்கள் அவரவர் நாட்டு இசைக்கருவிகளுடனும் பக்கவாத்தியப் பரிவாளங்களுடனும் எழுப்பும் ஒரு இன்னிசை வேள்வி. அமைதி, ஒற்றுமை, நட்பு, அன்பு யாவும் ஐக்கியமாகும் அந்த வேள்வியில் கேட்பவரும் இசைப்பவரும் தம் ஆன்மாவை அடையாளம் காண இயலுகிறது.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பெங்களூரில் ஐந்தாவது முறையாக அரங்கேறிய ருஹானியத்தை இரண்டாவது முறையாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மார்கழி குளிர் நடுக்குகிற இரவில், பெங்களூர் ஜெயமஹால் அரண்மனையின் திறந்த அரங்கம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது. பால் வெண்மையில் ஒருபக்கம் அரண்மனையும், பாலாய் பொழிந்தபடி வானிலே தேனிலாவும் கூடத் தயாராகின கானத்தில் நனைய. #படம் 1: ஜெயமஹால்

ஞ்சாப்பை சேர்ந்த பர்கத் சித்துவின் பாகிஸ்தானிய சூஃபி பாடல்களுடன் ஆரம்பமானது இசை விருந்து. இது போன்ற இசை நிகழ்ச்சிகள் ஏன் திறந்த அரங்கில் நடக்கின்றன என்பது அவரது குரல் வானெங்கும் எதிரொலித்துத் திரும்பி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்ததில் புரிந்தது. குழப்பமான கொந்தளிப்பான வாழ்வில் தொடர்ந்து நம்மை ஆனந்தமாக இருத்திக் கொள்ளும் ரகசியங்களைச் சொல்வதானதாய் இருந்தது அப்பாடல்.

இப்படி எதைப் பற்றி பாடுகிறார்கள் என முதலிலேயே ஆங்கிலதில் அறிவித்து விடுவதால், மொழி புரியாவிட்டாலும் அதன் உணர்வோடு ஒன்றி ரசிக்க இயலுகின்றது.

கிப்தைச் சேர்ந்த அரசு சூஃபி குழுவினர் ஷேக் அப்துல் ஹமீது அல்ஷரீஃப் மற்றும் முகமது ஃபர்கலி ஆகிய பாடகர்களுடன் மேடையேறினர். மூன்று வெவ்வேறு விதமான கம்போஸிஷன்களில் இடைவெளியின்றி பாடி அசத்தினார்கள். கடவுளுக்கான வாழ்த்தில் தொடங்கி பிரபல கவிஞர்களின் பாடல்களின் மூலமாக மகிழ்ச்சிக்கான செய்தியைப் பரப்பினார்கள். அந்த உயிர்ப்பான குரல்களில் மெய்மறந்திருந்த ரசிகர்களை அப்படியே எகிப்துக்கே கொண்டு சென்று விட்டனர் தம் அபாரமான வாசிப்பால் இசைக் குழுவினர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பார்வதி பவல்(Parvathy Baul) பற்றி அறியாத இசைப்பிரியர்கள் இருக்க முடியாது. இவர் பாடகி மட்டுமல்ல. சிறந்த ஓவியரும் கதைசொல்லியும் கூட. ரவீந்திரநாத் தாகூரின் சாந்தினிகேதன் கலாபவன் மாணவியாக இருந்தவர் பவல் சமூகத்தின் கலாச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு அவர்களின் பழக்கவழக்கங்களுடனான இசைவழி செல்ல முடிவெடுத்தவர். #படம் 2:பார்வதி பவல்

இவர் பாடும் போது கூடவே இசைக்கப் பயன்படுத்துவது ஒற்றை நரம்பு கொண்ட எக்தாரா, ஒரு ஜோடி முரசு, மற்றும் காலின் சலங்கைகள்.# படம் 3 : எக்தாரா, முரசு [முதல் இம்மூன்று படங்கள் மட்டும் ஸோனி w80-ன் அதிகபட்ச ஜும் ஒத்துழைப்பில் நான் எடுத்தவை.]

ராஜஸ்தானைச் சேர்ந்த பெரியவர் கச்ராகானும், கோடாவைச் சேர்ந்த ஹிஃப்சுரேமான் ஹகிமியும் சிறப்பாகப் பாடினார்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்திருந்தது இறுதியாக வந்த டனோரா(Tannoura) நடனம். கலை என்பது தெய்வீகம் எனும் அர்ப்பணிப்புடன் வேகமாக ஒலித்த இசைக்கு சுறுசுறுவென சுழன்று சுழன்று இருபது நிமிடங்கள் ஆடி பார்வையாளர்களைக் கிறங்க வைத்து விட்டனர் முழுநீள பலவண்ண உடையிலிருந்த இருவர். மேலே குடை போல சுழற்றுவது ஆரம்பத்தில் இடுப்பில் அணிந்திருந்த பாவாடை போன்ற அங்கியின் மேல் அணிந்திருந்த ஒன்றே. ஹூலா ஹூப்ஸ் போல கொஞ்ச கொஞ்சமாக விரிந்து தலை வரை கொண்டு வந்து சுழற்றுகிறார்கள். கூட்டமே ஸ்தம்பித்து விட்டது.

கரகோஷம் விண்ணைப் பிளக்க, கடைசி ஐந்து நிமிடங்கள் அதை கையில் தூக்கிப்பிடித்து சுழற்றியவாறு கூட்டத்துக்குள் நடனமாடியபடியே வந்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். அற்புதமான காட்சிகள்தாம். படமெடுக்க அனுமதி இல்லாததால் வேறுவழியின்றி இணையத்திலிருந்து எடுத்து சிறிய அளவில் பகிர்ந்துள்ளேன். நன்றி:கூகுள்

நுழைவுச் சீட்டுகளிலேயே வீடியோ பதிவுக்கு அனுமதியில்லை என அச்சடிக்கப் பட்டிருக்கிறது. பங்கு பெறும் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் தனித்தனி ஆடியோ வீடியோ சிடிகளாக அங்கேயே விற்கப்படுகின்றன, விருப்பமானவர் வாங்கிட வசதியாக. இடைவேளையில் நாங்களும் வாங்கினோம். வீடியோதானே கூடாதென பலர் தம் மொபைல் மற்றும் காமிராக்களில் மேடை நிகழ்வை அவ்வப்போது புகைப்படமாக க்ளிக்கிட்டபடி இருக்க நானும் தயக்கத்துடன் பார்வதி பவல் தோன்றும் போது ஒருசில படங்கள் எடுத்தேன். புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்கும்படியும், அது கலைஞர்களுக்கு இடைஞ்சலாக அமையுமென்றும் அடுத்து அறிவிப்பானது. காமிராவைப் பைக்குள் போட்டு மூடி விட்டேன். இதுவும் மேடை நிகழ்வுகளில் மதிக்கப்படவேண்டிய ஒரு புகைப்படப் பாடம்தானே:)?

ருஹானியத். நீங்கள் வசிக்கும் நகரில் நடைபெற்றால் தவறவிடாதீர்கள். பெரிய இசைஞானம் ஏதுமின்றி இரண்டுமுறையும் வெகுவாகு ரசிக்க முடிந்த அனுபவத்தில் சொல்லுகிறேன்:)! இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகை ஆதரவற்றோருக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.
***

எழுதி வைத்து, ரொம்ப காலமாக ட்ராஃப்டிலேயே இருந்து போனவற்றைத் தொகுத்து மூன்று பாகங்களாக வழங்கியாயிற்று! பொறுமையாய் கூட வந்தவருக்கு நன்றி:)!

புதன், 1 ஜூன், 2011

கண்ணோடு காண்பதெல்லாம்.. நடனம் - மேடைப் படங்கள் (பாகம் 2)

கண்ணோடு காண்பதெல்லாம்.. காமிராவுக்குச் சொந்தமில்லை என எனைத் தடுமாற வைத்த அனுபவம் இது:)!

இரவுக் காட்சிகளை எடுக்க என்னென்ன அவசியம் என்பதைப் புரிய வைத்த படங்கள் இவை.

சென்ற வருட ஜனவரியில் விடுமுறைக்காக குமரகம் சென்றிருந்ததும் அதைப் பற்றிய பகிர்வு ‘ஏரிக்கரைப் பூங்காற்றே..’ புகைப்படங்களுக்காக தமிழ்மணம் விருது 2010 வெள்ளிப் பதக்கம் பெற்றதும் உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும்.

அங்கு வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்த தாஜ் ரெட்ரீட் விடுதியில் இருக்கும் சிறு நீர்தேக்கத்தைச் சுற்றிலும், மாலைச் சூரியன் மெல்ல மெல்ல ஏரிக்குள் உறங்கச் செல்ல, இருள் படர ஆரம்பிக்கும் ஏழுமணி அளவில் ஆரம்பித்து, நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். (நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம்). சரியாக அத்தனை விளக்குகளும் ஏற்றி முடிக்க ஒருமணி நேரமாவது தேவைப்படுகிறது.

இந்தப் பின்னணியில் அங்கிருக்கும் பேக்கர்ஸ் பங்களாவையொட்டிய புல்வெளியில் தினமும் இரவு எட்டிலிருந்து எட்டரை மணி வரை ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. அருகிலேயே உணவுக் கூடாரம். இரவு உணவை சுவைத்தபடி நிகழ்வுகளை தங்கியிருப்பவர் ரசிக்கவே இந்த ஏற்பாடு.

முதல் நாள் மோகினி ஆட்டம். மாலை படகுச் சவாரி முடிந்து ஏரிக்கரை புல்வெளியில் வழங்கப்பட்ட கேரளப் பணியாரங்கள், தேநீர் இவற்றால் வயிறு ‘கம்’ என்று இருப்பதாகவும், பசிக்கவில்லையாதலால் சற்று பொறுத்து வருகிறோமென்றும் கணவரும், மகனும் காட்டேஜில் தங்கி விட நான் மட்டும் ஆர்வமாய் ஆஜராகி விட்டேன் அங்கே எட்டு மணிக்கு. நான்கு நாட்களுமே ஆரம்பத்தில் இருபது பேரும் நிகழ்வு முடியும் நேரம் 40 பேர் வரைக்குமே பார்வையாளர்கள் எனினும் முழு ஈடுபாட்டுடன் கலைஞர்கள் லயித்து ரசித்து தம் கலையோடு ஒன்றி, பார்ப்பவரையும் ஒன்றிட வைத்தார்கள்.

என்ன ஒரு அருமையான சந்தர்ப்பம்? படம் எடுக்க எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. புல்வெளியின் சமதளத்துக்கு தற்காலிகமாய் போடப்பட்டிருந்த மேடையை ஒளியூட்ட ஒரு ஃபோகஸ் விளக்கு(படம் 1). எத்தனை நெருங்கிச் சென்று வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். வழக்கமாக படம் எடுக்க போட்டிக்கு வரும் வெளிநாட்டவர் கூட யாருமில்லை. ஆயினும் ஆயினும்.... :(!

அகல் தீபங்கள் ஆயிரம் பின்னால் ஒளிர்ந்து கொண்டிருக்க அற்புதமாக ஆட ஆரம்பித்தார் நர்த்தகி. ரசித்தபடியே ஆர்வமாகப் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். எடுத்த படங்களை உடனுக்குடன் பார்க்கப் பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். ‘மோகினி ஆட்டமல்லவா? அதனால்தானோ!’ என எண்ணும் வகையில் நர்த்தகியின் கைகள் கழன்று திசைக்கொன்றாக வான் வெளியில் மிதந்து கொண்டிருந்தன. ‘மகிஷாசுரனை அழிக்க வந்த ஸ்வரூபமோ’ எனத் தலைகள் பன்மடங்காகித் தெரிந்தன.

சோனி W80 அளவில் மிகச் சிறியதாயினும் எனக்குக் கைநடுக்கமே ஏற்படாது. பலரும் என் பல படங்களைக் குறிப்பிட்டு ஷேக் இல்லாமல் எடுத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் . ‘ஓஹோ.., இது பாராட்டுக்குரிய ஒரு திறமை போலும்’ என உணர்ந்திருக்கிறேன்.

என்னதான் பிரச்சனை என முழிந்துக் கொண்டிருக்கையில் கணவரும் மகனும் சாவகாசமாக நடந்து வந்து கூடாரத்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். பீதி அப்பிய முகத்தோடு விரைந்து சென்று ‘காமிராவுக்கு என்னவோ ஆயிட்டு’ என்றேன். முந்தைய பாகத்தில் சொன்னது போல நான்தான் அப்போது காமிராவின் பிற பயன்பாடுகளை முயன்றிராத பேர்வழியாயிற்றே. கணவர் சிரித்து விட்டு ‘இரவுக் காட்சிகளுக்கு ISO மாற்றணும். Night shot mode இருக்குதா பார்’ எனச் சுட்டிக்காட்ட அதன் பிறகு எடுத்த படங்களே இங்கே:
மோகினி ஆட்டம்
#படம் 1#படம் 2#படம் 3#படம் 4


2. பரதம்
#படம் 5#படம் 6
3. திருவாதிரைக்களி
ஓணம் மற்றும் திருவாதிரை விழாக்களில் கேரள நங்கையர் ஆடி மகிழும் இந்நடனம் ‘கைகொட்டிக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது. (தீபங்களின் ஒளி தனித்துத் தெரிய வேண்டுமென்பதற்காகவோ என்னவோ, இந்த நிகழ்ச்சிக்கு ஃபோகஸ் லைட்டும் இருக்கவில்லை. மிகக் குறைந்த வெளிச்சத்தில் படமாக்க வேண்டியிருந்தது.)
#படம் 7


இப்படியாகத் தொடர்ந்து வந்த நாட்களிலும் ISO மற்றும் twlight mode-ல் ஒருவாறாக . . 'சுமார்' திருப்தியுடன் இரவுப் படபிடிப்பை முடித்தேன். (சுமாராகத் தேறியவற்றையே பகிர்ந்தும் உள்ளேன்).

ஊரிலிருந்து வந்ததும் ‘பிட்டூ..’ என ஓடினேன். இரவுப் புகைப்படக்கலை பற்றிய விளக்கங்கள் இரண்டு (PiT) பதிவுகளில் கிடைத்தன:இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்; படம் செய்ய விரும்பு- 5 இரவு புகைப்படக்கலை - பாடம் 1.

“இரவு காட்சிகளில் முக்காலியின் அவசியத்தை பல காலம் கழித்துதான் தெரிந்து கொண்டேன்
” என இதிலொரு பதிவில், இன்றைக்கு சென்னையில் புகைப்படக் கண்காட்சிகள் நடந்தும் புகழ்பெற்ற வல்லுநர் ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தது பார்த்து சற்றே ஆறுதலாகவும், கொஞ்சமே கொஞ்சம் அற்ப சந்தோஷத்தைத் தருவதாகவும் இருந்தது:)! DSLR-ல்தான் நல்ல ரிசல்டுக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும் கூடுதலாக நான் செய்திருக்க வேண்டியது முக்காலிக்கு பதில் ஒரு நாற்காலியில் காமிராவை வைத்து செல்ஃப் டைமர் போட்டிருந்திருக்கலாம்.

போகட்டும். இப்போது முக்காலியுடன் DSLR-ல் இரவுக் காட்சிகளைப் படமாக்குவதிலே தேர்ச்சி பெற்று விட்டக் கதையைதான் உங்களுக்கு ஏற்கனவே சூப்பர் மூன் மற்றும் சித்திரா பெளர்ணமி பதிவுகளில் சொல்லி விட்டுள்ளேனே. நீங்களும் சூப்பர் சூப்பர்னு சொல்லிவிட்டீர்களே:)!
***

சவாலே சமாளி.. பட்டிமன்றம் - மேடைப்படங்கள் (பாகம் 1) இங்கே.

அடுத்த பாகத்துடன் தொடர் நிறைவுறும்:)!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin