
கோவிலில்
அர்ச்சனைக்குக் கொடுத்திருக்கிறாளாம்
அவர் பெயரில்
அழைத்து நின்ற மனைவிக்கு
அவள் செல்லமகன் கடைக்குட்டியைக்
கைகாட்டி விட்டு
மனையெங்கும் நிறைந்திருந்த
மற்ற உறவுகளைக்
கூட்டினார் ஒன்றாகக் கூடத்தில்
அடுத்த ஐந்து தினங்களில்
வரவிருந்த தன் ஐம்பதாவது
மணவிழாக் கொண்டாட்டத்தில்
எவரெவருக்கு என்ன பொறுப்பெனப்
பிரித்துக் கொடுத்துவிட்டுப்
பெருமிதமாய் நிமிர்ந்தமர்ந்தார்
வருகின்றயாவரும் வாய்பிளந்து
ஆச்சரியப் பெருமூச்செறிந்து
கண்ணிமைக்கவும்தான் மறந்து
போகின்ற வண்ணமாய்
பரிசொன்றைத் தரவேண்டும்
சபையிலே தன்னவளுக்கு
கவுரவத்தைக் காக்கும்வகையில்
கச்சிதமான பொருளினைப்
பரிந்துரைக்கும் நபருக்கும்
தருவேன் என்றார் அன்பளிப்பாய்
தங்கத்தில் மோதிரமொன்று
நடுவில் உயர்ரத்தினம் பதித்து
முன்வந்து சிலாகித்தாள்
மூத்த கொழுந்தியாள்
அன்றொருநாள் போத்தீஸில்
வியந்துபார்த்து வாங்காதுவிட்ட
பாட்டுப்பாடும் சீலையை
'வைரத்தில்ஆரம் வனப்பாய்
இருக்கும் அண்ணிக்கு'
குரல் கொடுத்தாள் தங்கை
வேண்டும் போது பெற்றிடலாம்
உரிமையோடு இரவல் என்று
'தனியாகக் கார் இருந்தால்
சவுகரியம் பாட்டிக்கு'
ஊர்சுற்ற தனக்கும்
உள்ளுக்குள் நினைத்தபடி
செல்லமகளின் சீமந்தப் புத்திரன்
'ப்ளாஸ்மா நல்லாயிருக்குமே'
தென்றலும் திருமதிசெல்வமும்
இனிவிரிவார்கள் பெரியதிரையில்
கற்பனையில் அகமகிழ்ந்தபடி மருமகள்
பெரியமகன் சொன்னது
சகலைக்குப் பிடிக்கவில்லை
அயித்தான் சொன்னது
அத்தைக்கு ஒப்புதலில்லை
அவரவர் ஆசைக்கு
அடுத்தவர் சொல்வது
அத்தனை ரசிக்கவில்லை
ஆனாலும் பெரிதுபடுத்தாது
நவநாகரீக பிளாட்டின நகைமுதல்
அதிநவீன கைபேசி வரை
ஒவ்வொருவர் ஒன்றைச் சொன்னார்
தவற விடுவானேன்
தனிபரிசையெனப் பலபேரும்
அக்கறையில் வெகுசிலபேரும்
எவர்சொன்னதிலும் திருப்தியின்றி
அவகாசம் வாங்கிக்கொண்டு
கூட்டத்தைக் கலைத்திட்டார்
குழப்பத்துடன் எழுந்திட்டார்
ஓய்வாக உள்ளறையில்
ஆழ்ந்துபோனார் சிந்தனையில்
ஆடியதுநிழல் வாசற்படியிலே
அன்னைக்குத் துணையாக
ஆலயம் சென்றிருந்தவன்
நின்றிருந்தான் நெடுமரம்போலே
ஏனோ தன்னோடு அதிகம்
ஒட்டுவதில்லை எனும்
நெஞ்சடைக்கும் ஏக்கத்தால்
அதீத பிரியம்தான்
எப்போதும் இவன்மேலே
சொல்லெனக் கண்ணாலேபேசிக்
கனிவாய்ப் பார்த்திருந்தார்
ஆடும் நாற்காலியில்
முன்னும்பின்னும் போனபடி
சின்னத் தயக்கத்துக்குப்பிறகு
திறந்தான் சின்னவன் மனதை
"இனியாவது அம்மாவுக்கு
மதிப்பு சந்தோசம் நிம்மதி"
நின்றது நாற்காலி
நிற்காமல் காலகாலமாய்
ஓடிக் கொண்டிருந்தது
அறைமூலையில்
ஆளுயரப் பாட்டன்கடிகாரம்
திருகப்பட்ட சாவிக்குத்
தடையற்ற
சேவையைத் தந்தபடி
கடந்துபோன
நிகழ்வுகளுக்கு எல்லாம்
கனமான மவுனசாட்சியாய்..?!
***
படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்பி.கு: ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.